பவமேதென அறியார்துயர் பறந்தோடிட அருள்வாய்
தவறேசெயத் துணியாஎனைத் தனியாக்குதல் முறையோ
எவரேயுனை யல்லாதெனக் கேற்றதுணை இறையே!
அயலாரகம் துயில்வாரிடம் அன்பேசெயப் படைத்தால்
துயராலகம் அயராவரம் சுரக்காதது முறையோ ?
பயமேபடைத் தடியார் முகம் பார்க்காதது சரியோ ?
நயமேதரும் கருணாஒளி நயனமுடை இறையே !
சிறையேதரும் உலகோரிடம் சிரமேகுனிந் திடவோ?
குறையேமிகும் கொடியோரிடம் குறையே உரைத்திடவோ
மறையேதரும் இறைவாபுவி மறைந்தாயிதற் கெனவோ ?
நிறைவாகிய நிதியே குறை நிலைக்காதருள் இறையே !
அழியாப்பழி யடைந்தே அதை அடுத்தோரறிந் திடவே
மொழியாலுரைத் திடவேஎதும்முடியாநிலையடைந்தேன்
விழியாலெழும் துயரேசுடும் வெந்நீரெனச் சிந்த
ஒழியாத்துயில் புரிவாயெனில் பழிசேர்ந்திடும் இறையே!
பிறவாவரம் அளித்தாயிலை. பிழையாய்ப் பிறந்தாலும்
இறவாவரம் தந்தாயிலை; எண்ணாததை எண்ணி
மறவாவரம் அளித்தே, எனை மதியார்தமை மதித்தே
உறவாடிட உரையாடிட உணர்வூட்டிய இறையே!