பக்கம் எண் :

400துரை-மாலிறையன்

5. வான்புகல் காண்டம்

1. முதல் புனிதப் பயணப் படலம்

நன்றி கொன்றவரை அல்லா தண்டிப்பான்

நன்றியைக் கொன்று நல்ல நட்பினைப் பழித்த பேரை
என்றுமே அல்லா மன்னித்து இரங்கிடும் இயல்பு கொள்ளான்;
வென்றியைத் தந்து வீணில் விளையாட விட்டால் கூடக்
கன்றிஅன் னாரைச் சாய்த்துக் கடைசியில் தண்டம் ஈவான்; 1

செபுறயீல் வந்து கூறினார்

இவ்வகை முறை மாறாத இறையவன், தூதர் தம் பால்
“செவ்வகைப் போர்மேற் கொண்ட செம்மலே! பனீ குறைலா
தெவ்வரை அழித்த பின்பே திரும்புக” என்று கூறி
அவ்வுரை செபுறயீல்வாய் அன்பினால் விளம்ப வைத்தான்; 2

பனீகுறைலா இனத்தார் மேல் படை எடுத்தார்

ஆணையைக் கேட்ட ஆனை அன்னவர் ஆன செம்மல்
தூணையே நிகர்த்த தோளில் தூக்கிய படையை ஏந்தி
வானையே துணையாய்க் கொண்டு வாய்மையை நிலைநிறுத்த
மாணிலாப் பனீகுறைலா மனத்தினை மாற்றச் சென்றார்; 3

பனீகுறைலா இனத்தார் அஞ்சிக் கூறினர்

“வள்ளலே எதிர்க்க வந்தார் வலியவர் விண்ணின் தூதர்
எள்ளலே விளைத்தோம்; ஈங்கே எங்ஙனம் உய்வோம்? என்றே
உள்ளிய பனீகுறைலா ஒன்றிய குலத்தைச் சார்ந்த
மள்ளரும் நபிக ளாரின் மனங்கொள இதனைச் சொன்னார்; 4