பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்53


புகைறா என்பவன் வழியில் எதிர் வந்தான்

போகும் வழியில் எதிர்வந்த புகைறா எனும்பேர் அறிவாளன்
ஆகும் நன்மை தீமைஎலாம் அறிந்து சொல்லும் நெறியாளன்
ஈகை வள்ளல் முகம்மதுவின் இனிய தோற்றம் தனைக்கண்டு
பாகும் தேனும் சுவைக்கின்ற பச்சைக் குழந்தை போலானான்; 6

“இவரே நபி” எனத் தெரிந்து கொண்டான்

கழுத்துப் பின்னோர் முத்திரையும் கால்மண் தோயா அற்புதமும்
முழுக்க ஒளியே சுடர்கின்ற முத்து மேனி நற்பொலிவும்
ஒழுக்க முற்ற உயர்இயல்பும் உடைய இவரே மறைகூறும்
விழுப்பம் மிக்க நபிஎன்றே விளங்கிக் கொண்ட உளம்கொண்டான்; 7

அபூத்தாலிப்பு முகம்மதுவை அறிமுகம் செய்தார்

வண்ண மயிலார் ஆமினாவும் வள்ள லாம் அப் துல்லாவும்
மண்மேல் வானத் தூதரினை மகவாய்ப் பெற்றுக் கனிந்தார்கள்
கண்ணின் மணிபோல் காத்தவரே கவின்அப் துல்லா முத்தலிப்பே
இன்னார் என்றன் இளவல் மகன்” என்றார் அபூத்தா லிப்பாங்கே. 8

சாம் நகரில் பகைவர்கள் அதிகம் ஆயிற்றே

புகன்ற வரலா றதுகேட்ட புகைறா அந்த நல்லோர்பால்
தகுசீர் மிகுந்த சாம்நகரில் தக்கார் இனத்தைச் சேராத
பகைகொள் மனத்தார் எகுதியரும் பாவம் புரியும் இனத்தவரின்
வகைசேர் நசுறா னியர்பலரும் வாய்ப்புத் தேடி அலைகின்றார். 9

தீயார் இவரை மாய்க்க முயல்வார்களே!

மறைகள் போற்றும் நபிபெருமான் மண்ணில் வருவார் தீநெறியின்
கறைகள் போக்கும் நல்வினைகள் கண்முன் தெரியப் புரிவார்கள்
இறைவன் ஒருவன் அவனருளால் இசுலாம் நெறியே புகல்வார்கள்
மறைவாய் நின்றோர் பலர் இவரை மாய்க்க முயற்சி செய்வார்கள்; 10