பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
113

அருளிச்செய்கிறார்; சம்சாரத்துக்கு வித்து இன்னது என்றும், அதற்கு மருந்து இன்னது என்றும் அருளிச்செய்கிறார்.1

   
நீர் நுமது - கேட்டினைச் செய்கிற ‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள். ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை ‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச்செய்கிறார். இனி, செருக்கினைப் புலப்படுத்தும் அச்சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ 2என்பது கருத்து. ‘நன்று; ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; 3‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில், இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டு அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப்போருமது தவிரவேணுமே!

 

1. ‘நீர் நுமது’ என்பது சம்சாரத்துக்கு வித்து; ‘வேர் முதல் மாய்த்து’ என்பது
  மருந்து.

2. ‘உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின் உரவோய், நரகம்
  எய்துவன்; நாவும் வெந்துகும் என நவின்றான்,’ என்று அசுரகுரு கூறும்
  கூற்று ஈண்டு நினைவிற்கு வருகின்றது. (கம்ப. இரணியன் வதை. 37.)

3. ‘நான் என்னுமது தவிரும்படி என்?’ என்னில், என்றது, ‘நான் என்ற
  சொற்குப் பொருள் உயிர் என்பதாம்; அவ்வுயிரைத் தவிர்வது எப்படி?’
  என்றவாறு. இதற்கு இருவகையில் விடை அருளிச்செய்கிறார். ஒன்று,
  உயிர்கள் எல்லாம் இறைவனுக்கு அடிமை; தனக்குத்தானே உரியதாகிற
  சுதந்தரம் அவற்றிற்கு இல்லை; அவ்வுயிரில் இல்லாத அச்சுதந்தரத்தை
  அதனிடத்தில் ஏற்றிக் கூறுதல் ஒழிதல் வேண்டும் என்கிறார். அதாவது,
  ‘நான் செய்தேன்’ என்பது போன்று கூறுமிடங்களில் அகங்காரம்
  தோன்றுதல் காண்க. அவ்வாறு கூறின், இறைவனுடைய சுதந்தரத்தை நீக்கி,
  இராவணன் முதலியோர் ‘நான்’ என்று கூறிக் கேட்டினை அடைந்தது
  போன்று, உயிர்க்குக் கேட்டினை விளைத்துக்கோடலின், அதனை ஒழித்தல்
  வேண்டும் என்றபடி. ‘பண்டே உன் தொண்டாம் பழவுயிரை என்னது என்று,
  கொண்டேன்,’ என்றார் திவ்விய கவியும், இதனையே, வியாக்கியானத்தில்
  ‘இவன் அகம் என்றால் இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று
  பிறருடைய
நானைத் தவிர்த்துக் கொண்டன்றே இருப்பது? என்கிறார்.
  வியாக்கியானத்தில் ‘பிறர்’ என்றது, இறைவனை, இரண்டாவது விடை,
  உயிர்ப்பொருளைக் காட்டுகிற ‘நான்’ என்ற சொல்லால் சரீரத்தைக்
  கூறுவது தவிரவேண்டும் என்கிறார். இதனையே, ‘சரீரத்தில் அகம்புத்தி
  பண்ணிப்போருமது தவிர வேணுமே!’ என்ற வாக்கியத்தால் தெரிவிக்கிறார்.
  ஆக, அகங்காரத்தோடு கூறுகிற ‘நான்’ என்பதும், சரீரத்தைக் கூறுகிற ‘நான்’
  என்பதும் தவிர்தல் வேண்டும் என்றபடி.