பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 8

195

    வாமனன் - வடிவழகைச் சொல்லுகிறது என்னுதல்; அன்றிக்கே, சுகங்களைத் தருமவன் என்னுதல். என் மரகத வண்ணன் - சிரமத்தைப் போக்கக் கூடிய வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன். தாமரைக் கண்ணினன் - வடிவழகே அன்றி, அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசமான திருக்கண்களை உடையவன். காமனைப் பயந்தாய்-வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனைப் பெற்றவனே! 1அநுசந்தானத்திலே ஒரு தெளிவு பிறந்தவாறே முன்னிலை போலே தோன்றும், அப்படியும் சொல்லிக் கூப்பிடுவர்; அதற்கு மேல் சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அவை கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவர். இவை இரண்டற்கும் அடி அபிநிவேசம்.

    என்று என்று பாடியே உன் கழல் பணிந்து - இத்திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லாநிற்கத் திருவடிகளிலே விழுந்து. தூ மனத்தனனாய் - பந்த மோக்ஷங்கள் இரண்டற்கும் பொதுவான நெஞ்சாதல் இன்றி, மோக்ஷத்திற்கே ஏகாந்தமான மனத்தினை உடையனாய். பரிசுத்தமான மனத்தினை உடையேனாய் என்றபடி. அதன் பலமாக வருமதுவே பிறவி நீங்குவது; பிறவி துழதி நீங்க - பிறவித் துழதி உண்டு பாரமான துன்பம்; அது நீங்குபடியாக, என்னைத் தீ மனம் கெடுத்தாய் - அமிருதத்தையும் விஷத்தையும் ஒரு சேர விரும்புவாரைப் போன்று, உன்னையும் விரும்பி அற்ப விஷயங்களையும் உவக்கும் பொல்லாத மனத்தைத் தவிர்த்தாய். ‘ஆயின், ‘மருவித் தொழும் மனமே தந்தாய்’ என்ற போதே இதுவும் பெறப்படாதோ?’ எனின், ‘நல்ல மனத்தைத் தந்த அளவே அன்றிப் பொல்லாத நெஞ்சினைத் தவிர்ப்பதும் செய்தாய்’ என்றார். உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே- ‘செய்த உதவியின் கனத்தாலே பிரதியுபகாரம் செய்தல்லலது தரிக்கமாட்டுகின்றிலேன்; அதற்கு

_____________________________________________________________

1. ’வாமனன்’ என்பது போன்ற படர்க்கைப் பெயர்களும், ‘காமனைப் பயந்தாய்’ என்னும்
  முன்னிலைப் பெயரும் விரவி ஒரே பாசுரத்தில் வருதல் கூடுமோ?’ என்னும் வினாவைத்
  திருவுள்ளத்தே கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அனுசந்தானத்திலே’ என்று
  தொடங்கி, அபிநிவேசம் - அன்பின் பெருக்கு.

2. ‘நல்ல மனத்தைத் தந்த அளயேயன்றி’ என்றது, ‘அநந்யப் பிரயோஜனமானாலும் ஒரே
  காலத்தில் விஷயப் பிராவண்யம் உண்டாதல் கூடுமாகையாலே அதனைத் தவிர்த்தாய்’
  என்கிறார் என்றபடி. அன்றியே, மேலே விதி முகத்தால் அருளிச்செய்தார்; இங்கே
  மறைமுகத்தால் அருளிச்செய்கிறார் எனக் கோடலுமாம்.