பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 2

247

    பொ-ரை : கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய என் எந்தையே! எப்பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இஃதேயாம்; ‘எஃது?’ என்னில், தனது முயற்சி கொண்டு அடைய முடியாத உன் திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு; காலம் நீட்டித்தல் செய்யாதே.

    வி-கு : எந்தாய் - விளிப்பெயர். ‘எஞ்ஞான்றும் யான் உன்னைக் கொள்வது இஃதே’ என மாற்றுக. செய்யேல் - எதிர்மறை முற்று.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாட்டில், உடலால் அமையும் பேற்றை விரும்பினார்; இப்பாட்டில், மானசமான பேற்றை விரும்புகிறார்.

    முதற்பாசுரத்தில் ‘இஃதே’ என்று கூறியிருந்தும் 2’ஒரு பொருளையே பலகால் கேட்பின் மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமாதலின், இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும்’ என்று நினைத்து ‘இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான் ஈஸ்வரன்; ‘இஃதே’ என்கிறார். ‘நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும்படி யாங்ஙனம்?’ என்ன யான் உன்னைக் கொள்வது - 3இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம். அதாவது, 4ஸ்வாமியான உன் பக்கல் அடியவனான நான் கொள்ளுமது. இதுவே ‘நம்முடைய ஸ்வாமித்துவமும் உம்முடைய சேஷத்துவமும் கிடக்கச்செய்தே அன்றோ நெடுநாள் இழந்து போந்தீர்? ஆன பின்னர் நமக்கு இதில் ஐயம் தொடர்கின்றதுகாணும்; 5இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் இறைவன். ‘எஞ்ஞான்றும்’ என்கிறார்; அதாவது, ‘உயிர் உள்ள அளவும் இதுவே எனக்கு வார்த்தை’ என்றபடி. ‘ஆயின் இதிலே நிலை நிற்கும்படி உமக்கு இக்கெட்ட நெறியைக் கற்பித்தவர் யாவர்?’ என்றான் இறைவன்;

_____________________________________________________________

1. மேற்பாசுரத்தில் ‘தலைசேர்த்து’ என்றதனைக் கடாட்சித்தும், இப்பாசுரத்தில் ‘ஞானக் கை
  தா’ என்றதனைக் கடாட்சித்தும் அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. இவ்விடத்தில், வேதத்திற்கூறப்பட்டுள்ள நசிகேதன் கதையைக் குறிப்பிடுவர்
  அரும்பதவுரைகாரர்.

3. ‘இருவருடையவும் தர்மியே இதில் பிரமாணம்’ என்றது, சேஷ சேஷித்துவ ரூபமே இதில்
  பிரமாணம் என்றபடி.

4. மேல் வாக்கியத்தை விரிக்கிறார், ‘ஸ்வாமியான உன் பக்கல்’ என்று தொடங்கி.
  இவ்வாக்கியம் ‘அம்மா அடியேன்’ என்றதனை நோக்கி எழுகின்றது.

5. ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றது, ‘எத்தனை ஸ்நானத்துக்கு நிற்கும்?’ என்றபடி.
  பூசப்படுகின்ற வாசனைத் திரவியங்களின் நறுமணம் நாலு மூன்று ஸ்நானத்துக்குப்
  போகாது.