பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
224

பெ

    பொ-ரை : நித்தியசூரிகளுக்கு நீல இரத்தினம் போன்றவனும், திருப்பாற்கடலில் படத்தையுடைய ஆதிசேஷ சயனத்திலே யோக நித்திரை செய்கின்ற பரஞ்சுடரும், கடல் போன்ற நிறத்தையுடையவனான கிருஷ்ணனும், என்னுடைய அரிய உயிராய் இருப்பவனும், முற்காலத்தில் துரியோதனன் முதலிய நூற்றுவரோடு சேர்ந்து போர்செய்வதற்கு வந்த சேனைகள் முழுதும் அழியும்படியாகப் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து கொடிய போரிலே அப்பொழுது அருச்சுனனுக்குத் தேரைச் செலுத்திய பெருமானுமான பார்த்தசாரதியினுடைய செறிந்த வீரக்கழல் பொருந்திய திருவடிகளை என் கண்கள் காண்பது எப்பொழுதோ?’ என்கிறார்.

    வி-கு :
‘கழலை என் கண்கள் காண்பது என்றுகொல்?’ என்று மாறுக. ‘வெஞ்சமத்து நூற்றுவர் படை மங்க ஐவர்கட்காகித் தேர் கடவிய பெருமான்’ என்க. கொல் - அசைநிலை.

    ஈடு :
பத்தாம் பாட்டு. 1தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார். ‘ஆயின், சுலபமான அர்ச்சாவதாரத்தை விட்டுக் காலத்தால் முற்பட்ட கிருஷ்ணாவதாரத்திலே போவான் என்?’ எனில், ஒரோ விஷயங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இருப்பவர்கள் அருமையும் எளிமையும் பாரார்களே அன்றோ? பரத்துவத்துக்கு உயர்வு உண்டாய், போவாரும் பலர் உளராய் இருந்தும், 2‘சுவாமி! எனக்குத் தேவரீரிடத்தில் மேலான பிரீதியானது நிலைத்து

_____________________________________________________

1, மேல் பாசுரத்தில் அர்ச்சாவதார சௌலப்யத்தை அருளிச்செய்ததற்கும்,
  இப்பாசுரத்திலே ‘கிருஷ்ணனுடைய திருவடிகளைக் காண்பது என்றோ;’
  என்பதற்கும் சங்கதி, ‘தாம் உபதேசிக்கத் தொடங்கின’ என்றது முதல்
  ‘கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது’ என்றது
  முடிய.

2. ஸ்ரீராமா. உத். 40 : 16. இவ்விடத்தில்,

  ‘பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
  அச்சுதா! அமர ரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
  இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!’

  ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.’

  என்பன அநுசந்திக்கத்தகும்.