பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
81

New Page 1

    பொ-ரை : ஈசனும் உலகத்தை எல்லாம் உண்டு உமிழ்ந்த என் தந்தையுமான ஏகமூர்த்திக்குப் பூசுகின்ற சந்தனம் எனது நெஞ்சமே ஆகும்; சார்த்துகின்ற மாலையும் என்னுடைய சொற்களாலே தொடுக்கப்பட்ட மாலையே ஆகும்; உயர்ந்த பொன்னாடையும் அந்த வாசகம் செய் மாலையே ஆகும்; ஒளி பொருந்திய அணியப்படுகின்ற ஆபரணங்களும் என் கைகளால் கூப்பித் தொழுகின்ற வணக்கமே ஆகும்.

    வி-கு : வாசகம் - சொற்கள். வாசகம் செய் மாலை - திருவாய்மொழி முதலான பிரபந்தங்கள். ஏகமூர்த்தி - தன்னை ஒத்த இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபடியான விக்கிரஹத்தையுடையவன். ‘ஏக மூர்த்திக்குச் சாந்து நெஞ்சமே; கண்ணி வாசகம் செய் மாலையே; பட்டாடையும் அஃதே; கலனும் கைகூப்புச் செய்கையே ஆம்,’ என்க.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘என்னுடைய உறுப்புகளின் காரியங்களான நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும் இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

    பூசும் சாந்து என் நெஞ்சமே - சர்வேசுவரனுடைய திருமேனியின் வேறுபட்ட சிறப்பினையும், அவனுக்குத் தம் பக்கல் உண்டான விருப்பத்தையும் நினைத்துப் பின்னாடி மீளவும் சொல்லுகிறார், ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்று. புனையும் கண்ணி - 2வழக்கனான மாலை, அன்றிக்கே, சார்த்தப்படும் மாலை. என்னுடைய வாசகம் செய்மாலை - 3இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார். 4இவர் நெஞ்சினைக்

_____________________________________________________

1. ‘வாசகஞ்செய் மாலை. என் கைகூப்புச் செய்கை,’ என்று, உறுப்புகளினுடைய
  காரியங்களைச் சொன்னதற்குச் சேர, ‘நெஞ்சம்’ என்றதனை நினைவு
  பரமாக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’ என்று தொடங்கி.

2. வழக்கனான - செலவுக்கு யோக்கியமான.

3. ‘‘என்னுடைய’ என்று மமகாரம் படச்சொல்லலாமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இவர் அவனுக்கு’ என்று தொடங்கி. ‘யானே நீ;
  என்னுடைமையும் நீயே,’ என்றிருக்குமவராகையாலே, இவர் உடைமையாகில்
  அவனுக்கேயாயிருக்குமாதலின், மமகாரம் இன்று என்றபடி.

4, ‘வாசகம்’ என்பதற்கு, மலர்கள் என்று பொருள்கொண்டு, அவற்றால்
  செய்யப்பட்ட மாலை என்று திருவுள்ளம் பற்றி, அதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இவர்’ என்று தொடங்கி.