பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அமரர

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 7

365

அமரர்கள் அதிபதி ஒரு சம்சாரி பக்கலிலே மேல் விழாநின்றால்  எங்ஙனே ஆறி இருக்கும்படி? 1‘முன்னே உலகங்களுக்கு எல்லாம் நாதனாய் இருந்தும், சுக்கிரீவனைத் தனக்கு நாதனாக இச்சிக்கிறார்,’ என்கிற இதற்கும் அவ்வருகே இருக்கிறது அன்றோ இது? 2ஸ்ரீசுக்கிரீவ மஹாராஜரை நாதராக உடையர் ஆகைக்கு யோக்கியதை சம்பாதித்தபடியாயிற்று, முன்பு உலகநாதரானது. 3பெறுவார், பெறாது ஒழிவார்: முன்னம் இச்சியாநின்றார். கிடையாததிலே அன்றோ இச்சைதான் செல்லுவது? 4‘அப்படிப்பட்ட ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்தோடு இச்சிக்கிறார்’ என்றது போலே ஆயிற்று. 5வல்வினை போக வேணும் என்று இராத என்னுடைய, 6‘மயர்வுஅற மதிநலம் அருளினன்’ என்ற இத்தனை அன்றோ எனக்கு அருளினன்?’ என்கைக்கு, 7அருளுவதற்கு முன்பு

__________________________________________________________________________

1. உலகநாதன் என்கிற மாத்திரம் அன்றிக்கே, ‘வைகுந்தநாதன்’ என்கையாலே
  மஹாராஜரைக்காட்டிலும், இவர்க்கு வேறுபாட்டினை அருளிச்செய்கிறார், ‘முன்னே’
  என்று தொடங்கி.

        ‘ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
        லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி’

என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 18. இது, திருவடியைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

2. ‘ஸ்நாத்வா-நீராடி’ என்கிற வினையெச்சம் போலே, ‘பூத்வா-இருந்து’ என்கிற இதுவும்,
  அங்கமாகக் கொள்ளத் தக்கது என்கிறார், ‘ஸ்ரீ சுக்கிரீவ மஹாராஜரை’ என்று தொடங்கி.

3. ‘இச்சதி’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘பெறுவார்’ என்று தொடங்கி.
  ‘இச்சதி’ என்றால் இப்பொருளைக் காட்டுமோ?’ என்ன, ‘கிடையாததிலே’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. மேன்மையையுடையவன் தாழ நின்றதற்கு வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார்,
  ‘அப்படிப்பட்ட’ என்று தொடங்கி.

        ‘யஸ்ய ப்ரஸாதே ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
        ஸராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே’

என்பது, ஸ்ரீராமா, கிஷ். 4 : 21.

5. ‘என்’ என்ற சொல்லிற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘வல்வினை’ என்று தொடங்கி.

6. இங்ஙனம் பொருள் கூறுவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று
  தொடங்கி.

7. ‘எனக்கு அருளினன்’ என்னாது ஒழிந்தது என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அருளுவதற்கு முன்பு’ என்று தொடங்கி.