பக்கம் எண் :

209

32. திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்)

     நந்தா விளக்கே அளத்தற் கரியாய்
          நரநா ரணனே கருமா முகில்போல்
     எந்தாய் எமக்கே யருளாய் என நின்று
          இமையோர் பரவுமிடம், எத்திசையும்
     கந்தாரமந் தேனிசைபா டமாடே
          களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
     மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
          மணிமாடக் கோயில் வணங்கென் மனனே (1218)
                           பெரிய திருமொழி 3-8-1

     என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
திருநாங்கூரிலேயே உள்ளது.

     வேத புருஷன் ‘ஸ்தயம் ஞான மநந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம்ம
ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான். அதை அப்படியே தமிழில்
திருமங்கை,

     நந்தா விளக்கே, அளத்தற் கரியாய் என்று மங்களாசாசனம்
செய்துள்ளார்.

     ஸ்ரீமந் நாராயணனை விளக்கே என்று அழைக்கிறார்.
ஒருவராலும்தூண்டப்படாமல் தானாகவே ஒளியுடன் திகழும் தூண்டா
விளக்காகும். அதாவது நித்யமான ‘ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை
உடையவன்’ என்பது பொருள்.

     அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள்
நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி
மாடக்கோயில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.

மூலவர்

     நாராயணன், நந்தாவிளக்கு கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

தாயார்

     புண்டரீகவல்லித் தாயார்