பக்கம் எண் :

227

36. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

     சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
          திருத்தெற்றியம்பலத்தென் செங்கண் மாலை
     கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன்
          கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி
     பாரணிந்த தொல்புகழோன் கலியன் சொன்ன
          பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்
     சீரணிந்த வுலகத்து மன்னராகிச்
          சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே.-(1287)
                                   பெரிய திருமொழி 4-4-10

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே
உள்ளது. திருத்தெற்றியம்பலம் என பெயர் வரக் காரணம் யாதென
அறியுமாறில்லை. மலையாளத்தில் தான் கோவிலை அம்பலம் என்னும்
சொல்லால் குறிப்பர். தமிழ்நாட்டிலும் சில கோவில்களுக்கு அம்பலம் என்னும்
சொல் பயின்று வரினும் 108 வைணவ திவ்ய தேசங்களில் இத்தலம் ஒன்றிற்கு
மட்டுமே அம்பலம் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. இத்தலத்தின்
பெயர்க்காரணம் ஆய்வுக்குரியவொன்றாகும்.

     திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது.
பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் திருநாங்கூருக்கு உள்ளேயே இருப்பதால் இத்தலத்தை
அடைவதில் சிரமம் ஒன்றுமில்லை.

மூலவர்

     செங்கண்மால் ரங்கநாதர். லட்சுமிரங்கர் நான்கு புஜங்களுடன் சயன
திருக்கோலம். கிழக்கு நோக்கிய சயனம்.

தாயார்

     செங்கமலவல்லி

தீர்த்தம்

     சூர்ய புஷ்கரணி

விமானம்

     வேதவிமானம்