பக்கம் எண் :

231

38. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)

     கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
          நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
     செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
          எல்லா இடரும் கெடுமா றருளாயே - (1313)
                        பெரிய திருமொழி 4-7-6

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் சீர்காழி
தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ.
தூரம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

வரலாறு

     திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள
ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே
ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.

     முன்னொருகாலத்தில் சூர்ய வம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும்
மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9 வயதில்
மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும் சாஸ்திர வாதிகளால்
தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை
அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று (ஆயுள் விருத்தி) மந்திரஞ்
ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு கூறினார்.

     எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து கொண்டிருந்த
மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப் பயிற்சிப் பெற்று
தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாயமர்ந்து ஆயுள்
விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல்,
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை ஒரு மாதம்) கடுந்தவமியற்ற
சிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண
கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை
நல்கினார்.

     இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத புஷ்கரணி
என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.