1016. மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றுமி ழிந்து தயங்கொளி மண்ட பத்திற்
பொன்னின்னரி மெல்லணைச் சாமரைக் காமர்
                                பூங்கால்
மன்னுங்குடை நீழ லிருந்தனர் வையந் தாங்கி.
 44

     (இ-ள்.) வெளிப்படை. விளங்குகின்ற மணிமாளிகை வாயிலில்
யானை மேனின்றும் இறங்கி, விளக்க மிக்க கொலு மண்டபத்தில்
வந்து, பொன்புனைந்த சிங்காசனத்தின் மேல்,அழகிய சாமரைகளின்
மெல்லிய காற்று வீசப்பெற்ற வெண்குடை நீழலில் உலகங்காவலை
மேற்பூண்டு (மூர்த்தியார்) அரசு வீற்றிருந்தனர்.
 

     (வி-ரை.) மணிமாளிகை - அரசரது அரண்மனை. தயங்கும்
மணிமண்டபம்
- அதனுள் கொலு வீற்றிருக்கும் மண்டபம்.

     பொன்னின் அரி மெல் அணை - பொன்னாற்
புனையப்பட்டுச் சிங்கம் சுமந்தது போல அமைக்கப்பட்டிருக்கும்
அரச இருக்கை. மென்மை - பஞ்சு, தூவி முதலியவற்றை உள்ளே
இட்டு, வீற்றிருக்க மெல்லியதாய்ப், பட்டு முதலியவற்றால்
அமைக்கப்படுதல் குறித்தது. Soft cushion என்பர் நவீனர்.

     சாமரைப்பூங்கால் - சாமரைகளை இருபுறமும் மெல்ல
வீசுதலால் உளதாகும் மென்மையாக அசையும் காற்று. காமர் -
சாமரைகளின் அழகு - வரிசையின் ஒழுங்கு - இவற்றையும், பூ -
காற்றின் மென்மையினையும் குறித்தன. நவீனர், மேல் விசிறி
(Punka) வீச அதன்கீழ் வீற்றிருக்கும் இயல்பு காண்க.

     மன்னும் குடைநீழல் - உலகம் தன் கீழ்த்தங்கும் அரச
ஆணைக்கு அடையாளமாகிய வெண்குடையின் நீழலிலே. நீழல் -
உபசாரம். "வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும்,
சிங்காதனமும், மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம்" (சிவஞா -
போ - 8-ம் சூ. சிற்றுரை) என்றது காண்க.

     வையந் தாங்கி இருந்தனர் என்க. தாங்குதல் உபசார
வழக்கு. அரசாளுதல் குறித்தது. "வையம் முறை செய்குவனாகில்"
(1008).

     அணை - நீழல் - ஏழனுருபுகள் தொக்கன.

     அணிந்தவர் - சென்று - தாழ்ந்து - போந்தாராகி - இழிந்து -
நீழல் - இருந்தனர் என்று இந்த இரண்டு பாட்டுக்களும் கூட்டி
முடித்துக்கொள்க. 44