306


விளக்கம் : காளை செல்வமாகக் கருதப்படுதலின், ‘செல்வச்சே’ என்றார். ‘சே’ என்பது இங்குக் காளையினது வடிவத்தைக் குறித்தது. இவ்வடிவம் கொடியின் அகத்தே எழுதப்பட்டிருத்தலின், ‘சேவகம் ஏந்திய கொடி’ என்றார். திரிபுரங்களை அழித்தமையால், வீரனாயினான் என்பார், ‘புரம் செற்ற கொற்றச் சேவகன்’ என்றார்.

இதனால், இறைவனது வீரம் கூறப்பட்டது.

16

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரு இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே.

பதப்பொருள் : தேன் அகம் - சிவபெருமானது தேன் நிறைந்த உள்ளிடத்தையுடைய, மா - பெருமை பொருந்திய, கொன்றை மலர் பாடி - கொன்றை மலரைப் பாடி, சிவபுரம் பாடி - சிவலோகத்தைப் பாடி, திருச்சடைமேல் - அழகிய சடையின் மேலுள்ள, வான் அகம் - விண்ணிடத்து உலாவுகின்ற, மாமதிப் பிள்ளை பாடி - பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, மால் விடை பாடி - பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையேந்தும் - வலக்கையில் தாங்கிய, ஊன் அகம் ஆம் - தசை தன்னிடத்தில் பொருந்திய, மழு சூலம் பாடி - மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, உம்பரும் - விண்ணுலகத்தாரும், இம்பரும் - மண்ணுலகத்தாரும், உய்ய - பிழைக்கும் வண்ணம், அன்று - அந்நாளில், நஞ்சு - விடத்தை, போனகமாக - உணவாக, உண்டல் பாடி - உண்டதைப் பாடி, பொற்றிருச் சுண்ணம் - பொன்போலும் அழகிய வாசனைப்பெடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் : சரணடைந்தார்க்குத் தஞ்சமளித்துக் காக்க வல்ல பெருமான் என்பதை, ‘திருச்சடைமேல் வானக மாமதிப்பிள்ளை’ காட்டுகிறது. இனி, தான் துன்பத்தையேற்றும் தன்னையடைந்தவர்க்கு இன்பம் தருபவன் பெருமான் என்பதை, ‘உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாக நஞ்சுண்டல்’ காட்டுகிறது.

இதனால், இறைவனது அறக்கருணை கூறப்பட்டது.

17

அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி
காலனைக் காலால் உதைத்தல்பாடி