314


இதனால், இறைவனது பற்றே சிறந்தது என்பது கூறப்பட்டது.

5

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம், பெண்டிர் - மனைவியர், மக்கள் - புதல்வர், குலம் - குலம், கல்வி - கல்வி, என்னும் - ஆகிய இவையே உறுதிப்பொருளென நம்புகின்ற, பித்த உலகில் - மயங்குகின்ற இவ்வுலகத்தில், பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற, சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை, தெளிவித்த - போக்கிய, வித்தகத் தேவற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையன என்று அறியும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இனி, இறைவன் அடிகளுக்கு இவ்வறியாமையைப் போக்கி அறிவை நல்கினான் ஆதலால், ‘சித்த விகாரம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார். பிறவி அறியாமையால் வருகிறது என்பது மறை முடிபு.

‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு’

இதனால், இறைவன் ஞானத்தை நல்குபவன் என்பது கூறப்பட்டது.

6

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பெருள் : கோத்தும்பீ - அரச வண்டே! சங்கரனை - சிவபெருமானை, சட்டோ நினைக்க - செம்மையாக நினைக்க, மனத்து அமுது ஆம் - உள்ளத்தில் அமுதம் ஊறும், கேடு படாத் திருவடியை - அழியாத அவனது திருவடியை, கெட்டேன் - அந்தோ, மறப்பேனோ - நான் மறந்துவிடுவேனோ, ஒட்டாத - ஒன்றுபடாத, பாவித் தொழும்பரை - பாவம் செய்த அடிமைகளை, நாம் உரு அறியோம் - நாம் ஒரு பொருளாக அறிய மாட்டோம், சிட்டாய சிட்டற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.