2910.







மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி
      நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல
      வூர்கள்போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்மம
      ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன
      வாயிலே.          
               1

    1. பொ-ரை: மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும்,
வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரிநூலும்
கொண்டு, அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப்
பல திருத்தலங்கட்கும் சென்று, அன்னம் போன்ற நடையையுடைய
உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது, புன்னை
மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில்
ஆகும்.

     கு-ரை: மின் இயல் - ஒளிபொருந்திய. செஞ்சடை வெண்
பிறையன் - முரண்தொடை. பன்னிய - சொல்லியவற்றையே
திருப்பிச் சொல்லுகின்ற. மறை - கனம் சடைபோன்றவை பல.
ஊர்கள் போய் (5ஆம் வே - தொகை) பல ஊர்களினின்றும்
போய் அமரும் இடம். மாமலர் போன்று உதிர்க்கும் -
பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புனவாயில் என்க.