3068. பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
  புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.   6

     6.பொ-ரை: சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள,
நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின்
ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின்
திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம்
கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று
எள்ளற்க. அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு
புகழைத் தருவதாகக் கருதுக.

     கு-ரை: தற்போது இவ்வேடம் அணிந்திருப்போர் முன்
பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. உயர்வு என்று
வாயினும் சொல்ல முடியாத அவ்வளவு புகழைத் தருவதாகக் கருதுக
என்பது முதல் இரண்டடியின் கருத்து.

     "எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும்
கண்டால் உள்கி உவந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி...
ஈசன் திறமேபேணித் தொழு மடியார்" என்னும் அப்பர்
அருண்மொழிகளால் இதனை உணர்க.