| 
         
          | 3192. | எல்லையில்புக ழாளனும்மிமை |   
          |  | யோர்கணத்துடன் 
            கூடியும் பல்லையார்தலை யிற்பலியது
 கொண்டுகந்த படிறனுந்
 தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
 தூமலர்சொரிந் தேத்தவே
 மல்லையம்பொழி றேன்பில்கும்பிர
 மாபுரத்துறை மைந்தனே.                3
 |  
    
             3. 
        பொ-ரை: இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர். தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர். பற்களையுடைய பிரமனின்
 மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர். அவர்
 பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தெளிந்த
 அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட,
 வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும்
 திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய
 சிவபெருமானே யாவார்.
       கு-ரை: 
        பல்லையார்தலை, படிறன் - வஞ்சகன். எல்லாச் செல்வமும் வழிபட்டோர்க் களித்து ஒன்றும் இல்லான் போல்
 பிச்சையேற்றலின்.
      ஏறு - வினையைக் 
        கடந்தேறிய. மல்லல் - வளம், எதுகை நோக்கி மல்லை எனத் திரிந்தது. தேன்பில்கும் - தேன்
 சொட்டுகின்ற.
 |