3310. விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
  கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.        2

     2. பொ-ரை: திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச்
சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு
விதியாவதும், அவ்விதியின் விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய
முத்தி ஆவதுமாம். மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும்
சிவ ஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: மழபாடியுள் தலைவராகிய சிவபெருமானது
திருவடியே ஆன்மாக்களுக்கு விதியாவதும். அவ்விதியின்
விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய முத்தியாவதும், மனம்
கசிவிப்பதும், அதனால் தன்வயமாகச் செய்வதும், சிவஞானமாகி
விளைவதும், வலிய பற்றுக்கோடாவதும், அனைத்தும் ஆம்
என்க. மதி - இங்குச் சிவஞானம், வலி - ஆகுபெயர்.
நற்பாதம்:-‘நற்றாள்’ என்ற திருக்குறட் சொற்றொடர்க்குப்
பரிமேலழகர் உரைத்ததுரைக்க.