3703. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை
 

     யுமையொரு
பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ
      டிரலைமெய்
 தங்கிய கரதல முடையவர் விடையவ
     ருறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர்
     புறவமே.                           3

     3, பொ-ரை: வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும்,
வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும்
உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த
நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான். அவர் மழுவோடு,
மானையும் கரத்தில் ஏந்தியவர், இடப வாகனமுடையவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல்
பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க, அதில் மூழ்காது
அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: கொங்கு இயல் - வாசனை பொருந்திய, சுரிகுழல் -
சுரிந்த கூந்தல். வரிவளை - வரிகளையுடைய வளையல்(உமை). ஒரு
பங்கு இயல் - ஒருபாகம் பொருந்திய, திருஉருஉடையவர்;
அர்த்தநாரீசர்(பரசுவொடு - மழுவுடன். பரசு +ஓடு = பரசொடு என்று
ஆகற்பாலது, உடம்படு மெய் பெற்றது. "உக்குறள் கெடும்" என்னாது
"ஓடும்" என்ற இலேசினால்.) இரலை - மான், கரதலம் தங்கிய
மெய்யுடையவர் எனக் கூட்டுக. பொரு- கரையைமோதும். பொங்கிய
-கடல் என்க. கடல் உலகைக் கொள்ள, அக்கடலின்மேல் உயர்ந்து
தோன்றிய புறவம்.