3893. துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல்
       துளங்குமு டம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடு வரார்அழ
     லார்வி ழிக்கண்
நஞ்சுமிழ் நாக மரைக்கசைப் பர்நல
     னோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படு வார்க்கினி
     யில்லை யேதமே.                     4

     4. பொ-ரை: சிவபெருமான் அமைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக்
காலத்தில் திருநடனம் செய்பவர். தூய புன்சிரிப்போடு விளங்கும்
திருமேனியர். அழகிய சுடராானது நன்கு எரியும்படி கைகளை வீசி
ஆடுவார். நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர். நஞ்சைக் கக்கும்
நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர். நலம் பெருகச் செய்யும்
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி
எந்நாளும் துன்பம் என்பதே இல்லை.

     கு-ரை: துஞ்சு - அனைத்தும் ஒடுங்கும். இருள் -
இராக்காலமாகிய மகாசங்காரகாலத்தில் ஆடுவாராம், முறுவல் -
புன்சிரிப்போடு, அசையும் உடம்பினராகி, அழகிய ஒளிபொருந்திய
தீயின்கண் நின்று ஆடுவார். (நெற்றி) விழியினிடத்து நெருப்பை
யுடையவர். எம் சிவனார்க்கு - எமது சிவபிரானார்க்கு
அடிமைப்படுவார்க்கு இனி யெய்தக் கூடியதுன்பு இல்லை. (ஏதம் -
இங்கே துன்பைக் குறித்தது) "சிவனும் இவன் செய்தி யெல்லாம் என்
செய்தி யென்றும், செய்த தெனக் கிவனுக்குச் செய்ததென்றும் கொள்வன்" (சித்தியார். சூத்.10.1.)