3913. அரவொலி வில்லொலி யம்பினொலி
       யடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமே
     னிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த
     விறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும்
     பரிதிந் நியமமே.                     2

     2. பொ-ரை: வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும்,
மேருமலையாகிய வில்லின் ஓசையும், காற்று, திருமால், நெருப்பு
ஆகிய அம்பின் ஓசையும் எழ, பகையசுரர்களின் மூன்று
புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான்.
நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி
இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவன் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, தன்னை வணங்கிப் போற்றுவார்களின்
வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: அரவு ஒலி - வாசுகியென்னும் பாம்பாகிய நாணின்
ஓசையும், வில் ஒலி - மேரு மலையாகிய வில்லின் ஓசையும். அம்பு
ஒலி - காற்று திருமால் நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் ஆம்.
இவற்றால், அடங்கார் - பகை யசுரர்களது. புரம் மூன்றும்
கோட்டைகளையும். நிரவ வல்லார் - அழித்துத் தரையோடு
தலையாக்க வல்லவர். நிரம்பாமதி - கலை நிறையாத பிறை. புகுந்து
- வந்து.