4012. உற்றுமை சேர்வது மெய்யினையே
       உணர்வது நின்னருண் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
     கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பது முன்பணியே
      அமரர்கள் செய்வது முன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே
     பிரம புரத்தை யுகந்தனையே.           1

     1. பொ-ரை: இறைவரே! உமாதேவியார் பிரியாது பொருந்தி
இருப்பது உம் திருமேனியையே. சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது
உமது பேரருளையே. கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி
முதலிய குடும்பத்தையே. நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே. உமது திருமேனியை மறைப்பது பாம்பே. தேவர்கள் செய்வது உமது
பணிவிடையே. நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப்
பெருமானையே. நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றீர்.

     கு-ரை: பிரமபுரத்தை உகந்தனையே - திருப்பிரமபுரத்தை
விரும்பியருளிய பெருமானே! உமை - உமாதேவியார். உற்று -
பிரியாது பொருந்தி. மெய்யினை - உமது திருவுடம்பை. உணர்வதும் - சிவஞானிகள் அறிவதும். நின் அருள் மெய்யினையே - உமது
உண்மையான அருளையே. கற்றவர் - ஞானநூலைக் கற்ற துறவிகள்.
காய்வது - வெறுப்பது. கா - காத்திருந்த. மனையே - மனைவி
முதலியவற்றையே; என்றது மனைவி முதலிய மூவகை
ஏடணையையும். கனல்விழி - நெற்றிக்கண். காய்வது - எரித்தது.
காமனையே - மன்மதனையே. முன்பக்கத்தில் படம்விரித்துக்
கோவணமாகத் தங்கி. அற்றம் மறைப்பது - உனது மானத்தைக்
காப்பது. பணியே - பாம்பே. அமரர்கள் செய்வதும் உன் பணியே -
உனது பணிவிடையேயாம். பெற்று முகந்தது கந்தனையே - பெற்று
வாரி எடுத்து அணைத்தது முருகக் கடவுளையே. காமன் - உடற்
பற்றுக்கு ஆகுபெயர். காவடி போல உடம்பைக் குறித்தது, சுமக்கும்
மனை என்பதால்.