4019. ஈண்டு துயிலம ரப்பினனே
       யிருங்க ணிடந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே
     திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே
     மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேர லுமாபதியே
     புறவ மமர்ந்த வுமாபதியே.             8

     8. பொ-ரை: பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், தமது
பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில்
அர்ச்சித்தனர். தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில்
ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே. தாருகாவனத்து முனிவர்கள்
விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது
நகுவெண்டலை. அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல
வெண்டலைகளை மாலையாக அணிந்து கொண்டனர். அவர் சேர்வது
எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். புறவம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே
ஆவார்.

     கு-ரை: ஈண்டு - இங்கே (திருவீழிமிழலையில்). துயில் அமர்
அப்பினன் - கடலில் தூங்கும் திருமால். அப்பு - தண்ணீர், கடலைக்
குறித்தது தானியாகுபெயர். இரு - பெரிய. கண் - கண்ணை. இடந்து
- தோண்டி. அடி - திருவடியின்கண். அப்பினன் - சேர்த்தான்.
தீண்டல்அரு - தீண்டுவதற்கு அரிய. பரிசு - தன்மையுடன். அக்கரம்
- அந்தக்கரத்தில். திகழ்ந்து - விளங்கி. ஒளிசேர்வது - ஒளி
உடையதாய் இருப்பது. சக்கரம் - சக்கர ஆயுதமாம். வேண்டி -
(தாருகாவனத்து முனிவர்) விரும்பி. வருந்த - யாகம் செய்து
சிரமப்பட (தோன்றிய) நகைத்தலை - நகுவெண்டலையானது.
அவரோடு - அம்முனிவரோடு. மிகைத்து - மிக்க மாறுகொண்டு.
நகைத்தலையே பூண்டனர் - நகைத்தலை உடையதாக. பூண்டனர் -
தலைக்கண் அணிந்தனர். சிவனைக் கொல்லவந்த நகுவெண்டலை
சிரிப்பது, அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி அதனை அணிந்தனர் என்பது கருத்து. புறவு அமர்ந்த உமாபதி,
சேரலும் - சேர்வதும். மா - எவற்றிலும் சிறந்த (அடியார்
உள்ளமாகிய). பதி - இடமாம். “மலர்மிசை ஏகினான்” (குறள்.3)
என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்தது இங்குக் கொள்க.