4068. மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்
       வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத்
     தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த
     மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங்
     கழுமல நகரென லாமே.               1

     1. பொ-ரை: இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும்,
நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும், ஊமத்தம் பூ
மாலையும் அணிந்த சடையின்மேல், ஒலி அடங்கிய அலை
மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் எது என்றால், ஒலி மிகுந்த வெள்ளிய
அலைகள் முத்துக்களையும், சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து
ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச்
செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.

     கு-ரை: மடல் இதழ். படல் ஒலி - (ஒலிபடல்) ஒலி
பொருந்துதலை உடைய. விடல் - வீசுவதால். ஒலிபரவிய. வெண்திரை
- வெண்மையாகிய அலைகள்.