4115. நிலத்தவர் வான மாள்பவர் கீழோர்
       துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி
     யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
     தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            5

     5. பொ-ரை: மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள்,
பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய
அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச்
சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும்
இடம், தீய செயல்களால் பொருள் சேர்தலைச் செய்யாத
நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும்
சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர்
வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: “சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யார்” -
“சலத்தாற் பொருள் ... பெய்திரீஇ யற்று” (குறள். 660) சலம் -
தருக்கபரிபாடை. இங்குத் தீயவினைகளைக் குறித்தது. ஆளுடைய
பிள்ளையார், திருக்குறட்கருத்தை அமைத்துப் பாடினமைக்கு இது
ஒரு சான்று.