4124. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
       பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
     விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ்
     செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடச் சேர்க்குங் கோணமா
     மலையமர்ந் தாரே.                   4

     4. பொ-ரை: இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின்
வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய
மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின்
அவன் தேவி வேண்ட அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும்
தெரியும்படிஅருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர்.
தாமரை போன்ற திருவடிகளை உடையவர். ஆரவாரத்துடன்,
செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி இவற்றைத் திரளாக
அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: உலகத்தை அழிப்பது போலும் பெருக்கெடுத்துவந்த
கங்கையை ஒரு சிறு திவலையாக்கி ஒரு சடையின் ஓர் உரோமத்தின்
நுனியில் வைத்தது அதைப் பழிப்பதுபோல இருந்தது (பழித்து)
என்பதனால் பெறப்படுகிறது. தெழித்து - உரப்பி (மிக்க ஒலியைச்
செய்து).