2809. தாரி னார்விரிகொன்றை யாய்மதி
       தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல
தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடொழி யாததோர்
     செம்மை யால்அழ காயசிற் றம்பலம்
ஏரி னால் அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே. 9

     9. பொ-ரை: மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே,
பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய
தேர்களாலே பொலிவு நிறையப் பெற்ற திருவீதிகளையுடைய செல்வம்
நிறைந்த திருத்தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை
ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக்
கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம்.
ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.

     கு-ரை: விரி - மலர்ந்த, மறுகு - வீதி. திரு - செல்வம், அணி
- அழகிய, சீரினால் - சிறந்தநூன் முறைப்படி. வழிபாடு - நித்திய
நைமித்திகமாகிய பூசை. ஒழியாதது - ஒரு காலமும் நீங்காததாகிய.
செம்மை - செந்நெறி. உன - உன்னுடைய. சீர் அடி - சிறந்த
அடிகளை. ஏத்துதும் - துதிப்போம். தேரின் ஆர் மறுகு - “
தேருலாவிய தில்லையுட் கூத்தனை” எனத் திருநாவுக்கரசு
நாயனாரும் அருளுவர் தலமோ ‘அணிதில்லை’ கோயிலோ ‘அழகாய
சிற்றம்பலம்’, அங்கு அமர்ந்த பெருமானோ ‘ஏரினாலமர்ந்தான்’
இவ்வழகிய கூத்தப்பெருமானது பேரழகில் திளைத்த எமது வாகீசப்
பெருந்தகையார், “கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே,” “சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டாற் பின்னைக்
காண்பதென்னே,” என்பன முதலாக அருளினமையும் காண்க.
(தி.ப.80 முழுவதும்.)