2825. பாடினை அருமறை வரன்முறையால்
  ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
     நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
     தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே.3                                          

     3. பொ-ரை: ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய
வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே! அரிய
வேதங்களை இசையிலக்கண முறைப்படி, பாடியருளினாய்! முனிவரும்
அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில்
திருநடனம் ஆடினாய்! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த
காலனைக் காலால் உதைத்தாய்! முழுமுதற்கடவுளான உன்னை
அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில்
வீற்றிருந்து அருளினாய்! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக!
சுந்தரர் இறைவனிடம் “தலைவா உனை வேண்டிக் கொள்வேன்
தவநெறியே” என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.

     கு-ரை: வரன்முறையால்-இசையிலக்கண முறைப்படி; பாடினை
அருமறை-அரிய வேதங்களைப் பாடியருளினீர். அருவனத்தில்-
அரியதாருகாவனத்தில். காண-(முனிவர் மகளிர்) காணும்படி,
ஆடினை-ஆடியருளினீர். பெருமான் தானே வலியச்சென்று
அருள்புரிந்த இடமாதலின் அதன் அருமைப்பாடு தோன்ற அருவனம்
என்றார். காண என்ற வினைக்கு வினை முதல் வருவித்து
உரைக்கப்பட்டது. தக்கன் சாபத்தினால் உடல் குறைந்து அருகி
இருந்த பிறை. இறைவனைச் சரணம் புகுந்து வளருந்தன்மை பெற்று
அழியாதிருந்ததனால் நீடு வெண்பிறை யெனப்பட்டது. நின்மலன்-
இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்-தன்னைச்சார்ந்த
ஆன்மாக்களின் மலத்தை யொழிப்பவனென்றுமாம். புகலிந்நகர்;
இசையினிமைப் பொருட்டு நகரம் மிக்கது. இடம்மேவினை-இடமாக விரும்பி யருளினீர், நின் மலனே பாடினை, ஆடினை, சாடினை,
மேவினை எமக்கு அருள் எனக் கூட்டுக. ஆடினை முதல் நான்கும்
முன்னிலை வினையாலணையும் பெயர்; அண்மை விளியாய் நின்றன.
நினையே அடியார் தொழ என்ற தொடரில், ஏகாரம் பிரிநிலை.
“மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும், பிறக்கும்,
வினையும் செய்யும், ஆதலால் இவை இலாதான் அறிந்தருள்
செய்வனன்றே” என்ற பிரமாணத்தால் முன்னிலை வினைஎனலே
நன்று.