2830. |
இரவொடு
பகலதாம் எம்மான்உன்னைப் |
|
பரவுதல்
ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.8 |
8. பொ-ரை:
இரவு, பகல் போன்ற கால தத்துவத்தை
இயக்கும் எம்பெருமானே! வழி வழி அடிமையாக வந்த நான்
உன்னை நினைந்து வணங்கி போற்றுதலில் தவறேன்.
குராமலர்களையும், விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும்,
பாம்பையும் சடைமுடியில் அணிந்து, எம்மை ஆண்டருளும்
பெருமானே! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான
இராவணனின் இருபது தோள்களையும் அடர்ந்த நீ அன்னம்
போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில்
எழுந்தருளியுள்ளாய்.
கு-ரை:
இரவொடுபகல் அது ஆம் எம்மான். குரா-குராமலரும்,
விரிநறும் கொன்றை-விரிந்த நறுமணமுடைய கொன்றை மலரும்.
இனம் ஆர்தருதோள்-கூட்டமாகிய இருபது தோள்களையும். குரா
-குர என நின்றது. நடையில் அ(ன்)னம் மெல் நடையாளொடும்
புகலியுள் இருந்தனையே என முடிக்க.
|