2835.      வாழினும் சாவினும் வருந்தினும்போய்
       வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
     தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
     போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 2

     2. பொ-ரை: ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான
கங்கையையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே!
இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம்
அனுபவிக்கின்ற காலத்திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும்
காலத்திலும், நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற
காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச்
சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப்
பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ
ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில்
வீற்றிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை
செய்ய விரும்புகின்ற வேள்விக்காக) எனக்குப் பொருள் தாராவிடில்
அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: வீழினும் உனகழல் விடுவேன் அலேன்
என்பது-‘வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நானறியேன்
மறுமாற்றம்’ தாழ்-தங்குகின்ற; “வெள்ளம் தாழ்விரிசடையாய்” என்ற
திருவாசகத்திலும் இப்பொருளில் வருகிறது. தடம் புனல்-பரவிய
புனல். போழ் இளமதி-இங்கு இத்திருமுறை இரண்டாம் பதிகம் - 6
ஆம் பாசுரத்தில் உரைத்தது கொள்க.