2837.       தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
       அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
     கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
     மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 4

     4, பொ-ரை: கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி
அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி
செய்தவனே! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம்
வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப்
போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது.
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!
இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும்
முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய
விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத்
தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: தும்மல்-அடிக்கடி தும்முவதாகிய ஒரு நோய். “தும்மல்
இருமல் தொடர்ந்த போதினும்” (தி.3. ப.22. பா.6.) என்பதிலும்
காண்க. ‘கணை ஒன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே’
என்பதில் அம்பு ஒன்று; எரிந்த மதில் மூன்று என ஓர் நயம்
வந்தவாறு, “ஈரம்புகண்டிலம் ஏகம்பர்தம் கையில் ஓர் அம்பே
முப்புரம் உந்தீபற” என்ற திருவாசகத்திலும் காண்க.