2838.      கையது வீழினும் கழிவுறினும்
       செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
     கொய்யணி நறுமலர் குலாயசென்னி
     மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 5

     5. பொ-ரை: கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும்
மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக்
கண்டத்தையும் உடைய மறையவனே! கைப்பொருள்கள் யாவும்
இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக்
கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய
செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல்,
வேறெதனையும் Cநான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தன்மையுடைய என்னை நீ
ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார்
செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை
எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: கையது-கையிலுள்ள பொருள். கொண் அணி நறுமலர்
குலாயசென்னி-கொய்யப்பட்ட அழகிய நறிய மலர்கள் விளங்கும்
தலை. மையணிமிடறு-கருமை பொருந்திய கழுத்து.