2840.      வெப்பொடு விரவியோர் வினைவரினும்
       அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
     ஒப்புடை ஒருவனை உருவழிய
     அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 7

     7. பொ-ரை: அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத்
தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம்
அழியுமாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து
விழித்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல
வந்து தாக்கினாலும், அனைத்துயிர்கட்கும் தந்தையான உன்
திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும்
நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ?
(உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது
உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: ஒப்புடை ஒருவனை - அழகில் தனக்குத் தானே
யொப்பாகிய மன்மதனை. அப்படி அழல் எழ விழித்தவனே என்ற
தொடரில் அப்படியென்ற சொல் - வியப்புப்பொருள் தந்தது.
“அப்படிநல்ல நல்ல அவை நல்ல நல்ல” (கோளறு திருப்பதிகம்)
என்புழிப் போல.