2860. கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
  நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே.               5

     5. பொ-ரை: கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை
உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத்
தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.

     கு-ரை: கொன்றை மரங்கள் மஞ்சள் நிறமான மலர்களை
யுதிர்ப்பது பொன்சொரிவது போற் காணப்படுகின்றது.