2866. கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
  நன்று காழியுள் ஞானசம் பந்தன்
     இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
     என்றும் வானவ ரோடிருப் பாரே.         11

     11. பொ-ரை: கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய
சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில்
நற்புகழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்
பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள்
எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.

     கு-ரை: நன்று காழி - புண்ணியம் பொருந்திய காழி. ஞான
சம்பந்தன் இன்று சொன்ன பாடல்களைக் கொண்டு, இன்னும்
பிற்பட்ட பல்லாயிர ஆண்டுகளிற் கூறுவாரேனும், என்றென்றைக்கும்
தமக்கு வந்த ஆபத்தினின்றும் நீங்கி வானவரோடு இருப்பார்.