2870. அங்கையி லங்கழ லேந்தினா னும்அழ
       காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட
     லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக
     லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண
     வாளனே.                            4

     4. பொ-ரை: உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும்,
அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும், திருப்பாற் கடலில்
தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும், திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
சிவபெருமானேயாவான்.

     கு-ரை: உள்ளங்கையில் அழல் ஏந்தினவனும், கங்கையைச்
சடையிற் சூடியவனும், கடலில்வந்த நஞ்சையுண்டவனும்
திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே. அங்கையில் அங்கு அழல்
ஏந்தினானும் என்ற தொடரில் அங்கு அசைநிலை. "போர்த்தாய்
அங்கோர் ஆனையின் ஈருரிதோல்" செந்நிறச்சடையில் வெண்ணிறக்
கங்கையைக் கடவுள் சூடினது ஓர் அழகைத் தருகிறது என்பார்
அழகாகவே கங்கையைச் செஞ்சடைச் சூடினான் என்றார்.