2872. இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை
       யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ
     லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக
     லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ
     கனன்றே.                           6

     6. பொ-ரை: மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில்
ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும், தேவர்கள் தொழுது வேண்டப்
போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த
சிவலோகநாதனும், இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும், திருப்புகலி
நகரில் பாம்புபோன்ற இடையினையுடைய உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் அழகிய சிவபெருமானேயாவான்.

     கு-ரை: மகா சங்கார காலம் 'இரவு' எனப்பட்டது, சூரிய
சந்திரர், உடுக்கள் இவையெல்லாம் அழிந்துபட்டமையின். இப்பதிகம்
2-ஆம் பாடலைப்பார்க்க. மகா சங்கார காலத்தில் நெருப்பில்
ஆடினவனும், தேவர்கள் தொழுது வேண்டப் போர்முகத்தில்
முப்புரத்தைத் தீயால் எரியச் செய்தவனும், விடையை விரும்பி
ஏறினவனும், திருப்புகலியின் கண்ணே, பாம்பு போலும்
இடையையுடைய உமாதேவியோடும் எழுந்தருளினவனும்
இவனேயாவன். அப்பர் பெருமான் திருவாக்கில் வருதலும் காண்க.