2873. சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ்
       பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள்
     விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக
     லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர
     மனன்றே                           7

     7. பொ-ரை: திண்ணிய கயிலை மலையை விரும்பி
இருப்பிடமாகக் கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது
சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும்,
வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும்
திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும்
எல்லோருக்கும் மேலானவனான சிவபெருமானே யாவான்.

     கு-ரை: சேருமிடம் திண்ணிய கைலை மலையாகத்
தங்கினவனும், மார்க்கண்டர்மீது கோபித்தலைச் செய்து வந்து
கொடிய யமனை உதைத்தவனும், திருப்புகலியில் மலையரையன்
மகளோடும் எழுந்தருளிய பெருமானும் ஆவான். சேர்ப்பது என்ற
சொல்லில் "அது" பகுதிப்பொருள் விகுதி.