2879. எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு
       தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்
     தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட
     வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர
     னல்லனே.                           2.

     2. பொ-ரை: நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி
உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும்,
சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி
மார்க்கண்டேயன் வழிபட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக்
காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில்
மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில்
வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?

     கு-ரை: எரிதருவார் சடையானும்-நெருப்புப் போன்ற செந்நிறம்
பொருந்திய நெடிய சடையையுடையவனும். எருது ஏறி-எருது
ஏறினவன். கரிதருகாலன்-கரிய நிறத்தையுடைய இயமன்;
சிவனடியார்க்குத் தீமை செய்பவனுக்கு இந்தக் கதிதான் என்று
கரி(சாட்சி) யானவன் எனலுமாம். கடவூர்-இயமனை வீட்டிய
வீரஸ்தானம் ஆகையால் காலனைச் சாடினானும் என வரலாறு
குறித்தது.