2898. துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
  வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற                                  சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே. 10

     10. பொ-ரை:பொருந்திய காவியாடை அணிந்த புத்தர்களும்,
ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில்
விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர்.
சொல்லையும், பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கும்
இறைவர், தம்மைத் தவிர வேறெதையும் அறியாத அடியார்களின்
சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார்.

     கு-ரை:துற்று-பொருந்திய. துவர் ஆடையார்-மருதம்
தோய்க்கப்பட்ட ஆடையையுடையவர். துப்புரவொன்றில்லார்-ஒரு
பயனும் அறியாதவருமாகிய சமணர். “துப்புரவில்லார் துணிவு”
(பெரிய 1973.) வெறு அரையார்-ஆடையில்லாதவர்; திகம்பரர்.
வெற்றுச்சொல். தெரியா-சொல்லால் அறியப்படாத சொல்லுக்கு
அப்பாற்பட்ட பொருளாகிய ஒளிக்கு அப்பால் நின்ற. “சொல்லும்
பொருளும் இறந்த சுடர்” என்றபடி (திருவாசகம்)
சோதிதான்-பேரொளிப்பிழம்பானது. மற்று அறியா-பரமே கண்டு,
பதார்த்தங்கள் பாராத. அடியார்கள் தம் சிந்தையுள் மன்னும்
திருவீழிமிழலையாராகிய சோதி, சொல்லையும் பொருளையும் கடந்து
நின்றதாயினும் அடியார் சிந்தையுள் மன்னும்.