2920. பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன
       வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற்
     காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
     நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள்
     சேர்வரே.                        11

     11. பொ-ரை: பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு
பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள்
தொழுது போற்றுமாறு கடல் வளமிக்க சீகாழியில் அவதரித்த
நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப்
பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர்.

     கு-ரை: கடல்காழி - கடலுக்கு அணித்தான சீர்காழி. நற்றமிழ்
- வீட்டு நெறி தரவல்ல தமிழ். “நற்றவஞ் செய்வார்க்கிடம்”. அற்றம்
- சொற்பொருளறவு. இல் - இல்லையாக்குகின்ற. பாடல் - அற்றம்
முன் காக்கும் அஞ்செழுத்து.