2925. |
வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் |
|
மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி
செல்வனும்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக்
கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள்
நாதனே. 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் நறுமணம் கமழும் மாலை
யணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து
மகிழும் வலிமையுடையவன். செம்பவளம் போன்ற திருமேனியில்
வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன். அனைத்துயிர்களும்
விரும்பி அடையத்தக்க அவன், கொம்புகளிலுள்ள மலர்களை
வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்து, தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன்.
அவனே எங்கள் தலைவன்.
கு-ரை:
வம்பு அலரும் மலர்க்கோதை - வாசனை விரியும்
மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியார். மைந்தன் -
வலியவன், மைந்து - வலிமை, இரண்டாம் அடி முரண்தொடை,
செல்வன் - சிவபெருமானுக்கொரு பெயர். மலர் வண்டு கெண்டும்
- மலரில் வண்டுகள் உளர்கின்ற. (அருள்செய் எங்கள் நாதன்)
நம்பன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர். விரும்பத் தக்கவன்
என்பது பொருள். நம்பும் மேவும் நசையாகும்மே என்பது
தொல்காப்பியம். பதிப்பொருளைத்தவிரப் பிறபொருள்களில்
விருப்பம் வைத்தால் அவை துன்பமே பயக்குமாதலால்
எல்லா உயிரும் விரும்பியடையத் தக்கவன் சிவபெருமான்
ஒருவனேயாதலால் நம்பன் எனப்பட்டான். நதிசேர் செஞ்சடை
நம்பாபோற்றி என்ற திருவாசகமும் காண்க.
|