2929. ஓங்கிய நாரண னான்முக னும்உண
       ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம
     லன்னிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
     கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம
     ரனன்றே.                           9

     9. பொ-ரை: செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா
வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான்

இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச்
சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.

     கு-ரை: ஓங்கிய - செருக்கால் மிக்க. நீங்கிய - அளவு
நீங்கிய; அளவு அறியமுடியாத-தீ உரு ஆகி நின்றவன்.
அமரர்க்கமரன் - மகாதேவன். இவை சிவபெருமானுக்கு உரிய
பெயர்.