2934. தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
  பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.       3

     3. பொ-ரை: செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள்
அழியுமாறும், தேவர்களின் இன்பம் பெருகுமாறும், மேருமலையை
வில்லாகப் பிடித்த சிவபெருமான், அலைவீசுகின்ற கடல்
பக்கங்களில் சூழ்ந்திருக்க, பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவாராய், கூந்தலுக்கு உவமையாகக்
கூறப்படும் பொருள்களெல்லாம் தமக்கு அத்தகைய நிறமும், அழகும்
இல்லையே என்று வருத்தமுறும்படி அழகிய, கரிய கூந்தலையுடைய
உமாதேவியின் கணவர் ஆவார். அவரைத் தரிசித்துப் பிறவிப்
பயனை அடையுங்கள்.

     கு-ரை: தருக்கிய-இறுமாந்த. திரிபுரத்தவர்கள்தாம்
உக-அழியவும். பெருக்கிய-தேவர்க்கு இன்பத்தைப் பெருக்கவும்.
சிலை-மேருவில். பெற்றி-நன்மை. பொருகடல்-கரையை மோதும்
கடல். வினைத்தொகை. பொரு+கடல் எதுகைநோக்கியது. கருக்கிய
குழல்-அம்பிகை குழலுக்கு. உவமைகூறும் பொருள்களையெல்லாம்
வருத்திய குழல். கருக்கிய-கருகும்படி செய்த (வருந்திய என்றவாறு.)
போர்க்கு அணிவகுத்துச் செல்லுதல்.