2948. விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
  படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே.      6

     6. பொ-ரை: இடபம் பொறித்த கொடியை வலக்கையில்
ஏந்தி, வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். உடுக்கை போன்ற
குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து,
சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு, சடையிலே கங்கையைத்
தரித்த சதுரன் ஆவான்.

     கு-ரை: வெண்மழு-இரும்பால் ஆகிய ஓர் ஆயுதம்.
தீட்டப்பெற்று வெண்மையாயிருப்பதால் வெண்மழு எனப்பட்டது.
“விரவார் வெருவத்திருப்பு சூலத்தினன். ஆதலால் இரத்தக்கறை
முதலியன படியாத வெண்மழு என்றார். ஒருத்தி தன்னுடம்பில்
ஒருபாகத்திலிருக்கவும் சடையில் மற்றொருத்தியை நீர்வடிவமாகத்
தோன்றுமாறு வைத்த சாமர்த்தியவான் அல்லரோ?