2967. அத்தகு வானவர்க் காக மால்விடம்
  வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.     3

     3. பொ-ரை: தாம் வாழ்வான் வேண்டி வணங்கும்
வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம்
கண்டத்தில் அடக்கிய சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும்
அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர்.
அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அத்தகு - அப்படிப்பட்ட. மால்விடம்-கொடிய
விடத்தை, மால் என்ற சொல் இங்குக் கொடுமையென்னும் பொருளில்
வந்தது. இப்பொழுது நீலமணி போற்காணப்படுவதாகிய கண்டத்தின்
உட்பாகத்தில் வைத்தவர். மத்தம்-பொன்னூமத்தை. மலிந்த-மிகுதியாக
அணியப்பட்ட கொத்துக் கொத்தாக அலரும் கொன்றையை
அணிந்தவர்.