2974. நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
  ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.           10

     10. பொ-ரை: இறையுண்மையை உணரும் அறிவில்லாத
நாணமற்ற சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள்
மெய்யானவை அல்ல. அவர்களைச் சாராதுவிட்டு, நான்கு
வேதங்களை அருளிய சிவபெருமான், நன்கு பழகிய உமாதேவியோடு
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள்.

     கு-ரை: அறிவில் நாண் இலிகள் - அறிவும் நாணமும்
இல்லாதவர். ஆடையின்றி யிருக்கும் துறவிகளை நாணிலிகள்
என்றார். “நாணமும் உடையும் நன்கனம் நீத்து” என்பது
மணிமேகலை. அவர் உரைகள் அனைத்தும் பொய். அவற்றை
விட்டு நான்மறை பாடிய, மாதோடும் கூடியிருப்பவராகிய
கொள்ளிக்காடர்உளார். “அவரைச் சார்ந்து உய்தி கூடுங்கள்”
என்பது குறிப்பெச்சம்.