2977. கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
  பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.          2

.     2. பொ-ரை: கீதங்களை முன்னே இசைக்க விளங்கும்
வீணையினை உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான
சிவபெருமானின் பொன்னகர் என்பது, இடபதேவர் வழிபட
விளங்குவதும், நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது
போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். கோதனம்
வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர்.
ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக்
கூறுவர்.

     கு-ரை: இசைப்பாட்டு முன்னே இசைக்க விளங்கும்
வீணையையுடையர் என்பது முதலடியின் பொருள். பூதம்...புனிதர் -
பூதங்கள் முன்னால் தம்மைச் சூழ நடந்துவரச்செல்லும் தூயோர்.
கோதனம் - பசு. இங்கே இடபதேவரைக் குறிக்கும். “புடைமலிந்த
பூதத்தின் பொலிவு தோன்றும்” “வெள்விடைக் கருள்செய்
விசயமங்கை” என்னும் அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் காண்க.