2979. தொடைமலி யிதழியுந் துன்னெ ருக்கொடு
  புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.     4

     4. பொ-ரை: கொன்றை மாலையும், நெருக்கமாகத்
தொடுக்கப்பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும்
சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
அழகிய நகரம், மழுவை ஆயுதமாக உடையவரும், பசிய
கண்களையுடைய வலிமையுடைய வெண்ணிற எருதுவை கொடியாக
உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: இதழி - கொன்றை. துன் - நெருங்கிய. எருக்கு -
வெள் எருக்கம் பூமாலை. புடை - பாகம். படை மலி மழு -
“படைமலிந்த மழு” என அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும்
இத்தொடர் வருதல் காண்க. மூரி - வலிமை. வெள்விடை. மூரி
என்ற சொல் மலையாளத்தில் - எருத்துக்கு வழங்கும்.